Sunday, April 27, 2008

கோயம்பேடு

திருச்சிக்கு போய் மச்சினரை பார்க்கனும் என்று பயணவிபரம் முடிவானவுடன், பக்கத்தில் உள்ள கோயம்பேடு CMBT என்று அழைக்கப்படுகிற சென்னை மொபசேல் பேருந்து நிலையத்துக்கு மாலை 4 மணிவாக்கில் போனேன்.
சிறிது நேரம் இடம் தேடி அலைந்த பிறகு திருச்சிக்கு செல்ல முன்பதிவு நிலையத்துக்கு முன்பு நின்றேன்.மூன்று வரிசை இருந்தது.ஒரு ரூபாய் கொடுத்து முன்பதிவு விண்ணப்பத்தாள் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றேன்.எப்போதும் போல் என் வரிசை மட்டும் மெதுவாக நகர்ந்து 30 நிமிடங்கள் கழித்து என் முறை வந்தது.நல்ல வேளையாக அன்றிரவே 11 மணிக்கு உள்ள பேருந்துவில் இடம் கிடைத்தது.

அன்றிரவு மற்றொரு உறவினர் வீட்டில் சாப்பாடு என்பதால் வீட்டு வேலைகள் அவ்வளவாக இல்லை.அந்த சாப்பாட்டை முடித்துக்கொண்டு இரு சக்கர ஊர்தி மூலம் பேருந்து நிலையத்தை அடைந்த போது மணி 22.30.

நமக்கு 11 மணி வண்டி தானே என்று பயணிகள் உட்கார்ந்து இளைப்பாரும் இடத்தில் நானும் என் மனைவியும் உட்கார்ந்திருந்தோம். ஒரு 15 நிமிடம் கழித்து பேருந்து இருக்கும் இடத்துக்கு போய் எங்கள் பேருந்து எங்கிருந்து என்று தேடிக்கொண்டிருந்தால்.... ஒவ்வொரு பேருந்து முகப்பு கண்ணாடியில் சுண்ணாம்பில் அந்த வண்டி கிளம்பும் நேரத்தை எழுதிவைத்திருந்தார்கள்.ஒரு வண்டியில் 22.00 என்று போட்டிருந்தது.அப்போது மணி 22.45.என் சந்தேகத்தை நிவர்த்திபண்ண அங்கிருக்கும் ஒரு நடத்துனரிடம் கேட்ட போது " ஆமாம்" இது தான் சரியான நேரம் என்றார்.அதற்குப்பிறகு தான் தெரிந்தது எல்லா வண்டிகளும் கால தாமதமாக புறப்பட்டு போய்கொண்டிருக்கிறது என்று.

கீழே உள்ள படத்தை பாருங்கள்,இது 22.15 க்கு போகவேண்டிய வண்டி அது 23.15 வரை கிளம்பவில்லை.காரணம் என்னவாக இருக்கும்.அதிகாரபூர்வமற்ற மனிதர் ஒருவர் காக்கிச்சட்டையில் இருந்து விட்டது, "பத்து மணி ஓட்டுனர் குடித்துவிட்டு,தூங்கிட்டாராம்!!"




நல்ல வேளை வண்டி ஓட்டவில்லை.ஓட்டியிருந்தால்...பயணிகள் கதி அதோகதியாகியிருக்கும்.

அதன் பிறகு ஒவ்வொரு பேருந்தாக கால தாமத்துடன் கிளம்பிக்கொண்டு இருந்தது,இந்த மாதிரி சாமயங்களில் அங்குள்ள விவரபலகையில் ஏதோ Null என்று வந்துகொண்டிருந்ததே தவிர எப்போது வரும் என்ற விபரங்கள் இல்லை.




பாவம் ஒருவர் மாத்திரம் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு இந்த வண்டி 10.30 வண்டி இது 10.45 வண்டி என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக எங்கள் இரவு 11 மணி வண்டி நள்ளிரவையும் தாண்டி சுமார் 12.30 க்கு வந்து 12.45 கிளப்பினார்கள்.

வழியெங்கும் சாலைப்பணிகள் நடப்பதால் அங்கங்கு நிறுத்தி நிறுத்தி ஒருவழியாக டோல்கேட்டை அடைந்த போது காலை 9 மணி.இரயிலில் 6 மணி நேரப்பயணம் பல காரணங்களால் 8 மணிக்கும் மேல் ஆனது.

கால தாமதங்கள் ஆகும் போது பயணிகளுக்கு கொடுக்கவேண்டிய அறிவிப்பு கூட செய்யாதது நாம் இன்னும் போகும் தூரம் அதிகமாக உள்ளதாகவே படுகிறது.

போகும் வழியில் எடுத்த சில படங்கள்...

இது பொழிச்சலூரில் உள்ள பழைய பாலம்.



வழியில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி.

Friday, April 25, 2008

சென்னை சுவாரஸ்யங்கள்...

நேற்று பகலில் கோடம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்களுக்கு மின்வண்டியில் சென்ற பிறகு அங்கு இரு புறமும் இருக்கும் பயணிகள் கடக்கும் பாதை இருந்தாலும்,பின் பக்கம் இருக்கும் நடைமேடையை உபயோகித்தேன்.அந்த சமயத்தில் பரங்கிமலையை நோக்கி இருக்கும் ரயில் பாதையை படம் எடுத்தேன்.

வீட்டுக்கு வந்து கணினி/ தொலைக்காட்சியில் பார்க்கும் போது இக்காட்சியை எதேச்சையாக எடுத்திருப்பது தெரியவந்தது.

எவ்வளவு பேர் செத்தாலும்,என்ன பாதுகாப்பு வழிகள் இருந்தாலும்.... நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பது போல் இருக்கல்லவா??



முயற்சித்து...




அப்பாடி! ஏறியாச்சு.

இவர்களை எப்படி திருத்துவது? எங்கிருந்து ஆரம்பிப்பது?

Friday, April 11, 2008

பற்றவைப்பு

கேப்பிட்டல் டவர்

போன பதிவில் இங்கு வேலை செய்வது பற்றி சொல்லியிருந்தேன்.

மிக முக்கியமான வேலை இந்த பைப் Column ஐ வெல்டிங் செய்வது தான்.அதற்குப்பிறகு அதை பரிசோதனை செய்யவேண்டும்.எல்லா பற்றவைப்பு வேலைகளையும் பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லாத்தால் மேலிடத்தில் குத்துமதிப்பாக எடுக்கும் தூண்களில் செய்யப்படும் வேலையை பரிசோதிப்போம்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்




கலரில் காண்பித்து இருக்கும் பகுதி பற்றவைப்பு வேலை சிறிது சிறிதாக முன்னேறுவதை காண்பிக்கிறது.

பற்ற வைப்பு வேலைகளில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது அதன் நேர்தன்மையை அல்லது அதன் நிலையை.பற்றவைப்பில் அதிக வெப்பம் வெளிப்படும் என்பதால் அதற்கு தகுந்த மாதிரி வெல்டிங் வேலையை செய்வார்கள்.ஒரு தூணுக்கு இருவரை பற்றவைப்பில் ஈடுபடவைப்பார்கள்.இப்படி செய்வதால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.அடுத்து அதன் மேல் முனையை கட்டுப்படுத்த இரும்புக்கயிறு போட்டு கட்டிவிடுவார்கள் அல்லது ஒரு பீமை கான்கிரீட் கட்டிடத்துடன் இணைத்துவிடுவார்கள்.

பற்றவைப்பு மற்றும் டெஸ்டிங் வேலை முடிந்தபிறகு அதனுள் கம்பி வைத்து (சிலவற்றில் கிடையாது) கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.Column Ready.இதன் உயரம் 6 மீட்டர் இருப்பதால் ஒரே சமயத்தில் இரு தளத்துக்கு தேவையான Column தயாராகிவிடுவதால் இம்முறை பெரிதும் விரும்பப்படுகிறது.கான்கிரீட்டிலே முழுவதும் செய்யவேண்டும் என்றால் இதைவிட அதிக நேரம் பிடிக்கும்.

இந்த தூண் பற்றவைப்பு முடிந்த பிறகு அதையும் மத்தியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடத்தையும் இணைக்கும் படி இரும்பு பீம்களை நிறுவுவார்கள். அதன் மீது பாண்டெக் என்று சொல்லப்படிகிற ஷீட்டை போட்டு அதன் மீது கான்கிரீட் போடுவார்கள்,அவ்வளவு தான் ஒரு தளம் தெரியாகிவிடும்.இதைப் போல் ஒவ்வொரு தளமும் தயார் செய்யவேண்டியது தான்.கீழே உள்ள படத்தில் பாண்டெக் என்று சொல்லப்படுகிற Roofing Sheet யும் பார்க்கலாம்.



ஸ்டீல் பீமையும் இந்த தள கான்கிரீட்டையும் இணைக்க அந்த பீமின் மேல் Shear Stud என்ற போல்டை பற்றவைப்பார்கள்.



இங்கு நடந்த மற்றொரு முக்கியமான நிகழ்வை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Monday, April 7, 2008

சன்யோங் - கொரிய நிறுவனம்.

தொலை அழைப்பான் செய்த எண்ணுக்கு தொலைபேசியவுடன் ஒரு வித்தியாசமான ஆங்கில உச்சரிப்புடன் கூடிய குரல் என் பெயரை மிகவும் கஷ்டப்பட்டு கடித்து துப்ப ஆரம்பித்தார்.இந்த மாதிரி பல முறை உள்ளூர்காரர்களிடம் அனுபவித்துவிட்டதால் சட்டென்று புரிந்துகொண்டு என் பெயரை நானே சொல்லி அறிமுகபடுத்திக்கொண்டேன்.

மறுமுனை, நான் அவரிடம் 2 வாரங்களுக்கு முன்பு சென்ற நேர்கானலை ஞாபகப்படுத்தி நாளை காலை வேலையில் சேருமாறு சொல்லி தஞ்சோம் பகார் நிலையம் அருகில் உள்ள கட்டுமான சைட்டின் பெயரை சொன்னார்.சம்பளம் குறைவு என்றாலும் இந்த மாதிரி நேரத்தில் வேலை கிடைப்பதே அதிசியம் என்பதால் ஒத்துக்கொண்டு போனேன்.

இந்த நிறுவனத்தின் பெயர் சான்யோங் (ssangyong) - கொரிய கம்பெனி.இவர்களுடன் நடந்த நேர்காணலை சின்னதாக பார்க்கலாமா?

வேலை செய்யும் இடத்திலேயே உள்ள கன்டெயினர் தான் அலுவலகம்.பல சைட்களில் இதான் நிலமை.கட்டிடம் ஓரளவு வளர்ந்தவுடன் அதனுள் போய்விடுவார்கள்.நான் போன சமயத்தில் என்னை நேர்காணல் செய்ய இருப்பவர் திரு கிம் (நிறைய பேர் பெயர் கிம் என்று இருந்ததால் அவர்கள் இன்சியல் போட்டுக்கொள்வார்கள்) சுமாரான உயரம் மிகவும் கஷ்டப்பட்டு பேசும் ஆங்கிலம் என்று இருந்தார்.சம்பிரதாய கேள்விகள் முடிந்தவுடன் வேலை நடக்கும் இடத்தை காட்டி அந்த தூண் இருக்கே அதன் விட்டம் என்ன? என்றார்.அது நான் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி இருந்த்து.நான் தோராயமாக 1 மீட்டருக்கு மேல் இருக்கும் என்றேன்.

ஒத்துக்கொண்டார்.

அடுத்து அவர் மேஜை மீது நிலவியல் கருவி ஒன்று இருந்தது,அதை காண்பித்து இதை எப்படி இயக்குவது என்று தெரியுமா? என்றார்.

தெரியும் என்றேன்.

சொல் என்றார்.

சொன்னவுடன் நம்பிக்கை வந்தவுடன் மேலும் சில கேள்விகள் கேட்டு பிறகு சொல்கிறேன் என்று போகச்சொல்லிவிட்டார்.இவருடைய எல்லா கேள்விகளையும் நான் இரு முறை சொல்லச்சொல்லி கேட்டு பதில் கொடுத்தேன்.அப்போது தான் கொஞ்சமாவது புரிந்த்து.பல பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட இப்படித்தான் பேசுகிறார்கள்.

இது தான் அந்த கட்டிடம்.



இதன் பெயர் “Capital Tower"

இது 52 மாடி உயரம் கொண்ட கட்டிடம்.சுற்றிலும் இரும்புத்தூண்களிலும் மற்றும் பீம்களிலும் நிற்கிறது.என்னுடைய வேலை Structural Steel மேற்பார்வை மற்றும் அதனுடன் தொடர்புள்ள வேலைகள்.

நான் போன போது தரைக்கு கீழ் உள்ள கான்கிரீட் வேலைகள முடிந்து மேல் வேலைகள் ஆரம்பித்து இருந்தது.

இதுவரை இந்த மாதிரி ஸ்டீல் வேலைகள் பார்த்ததில்லை என்பதால் சிஸ்டம் புரிய சில நாட்கள் ஆனது அதற்கு பேருதவியாக இருந்தவர் திரு சியா பியா மெங் என்பவர்.மேற்பார்வை செய்ய என்ன செய்யவேண்டும் என்று எனக்கு வகுப்பு எடுத்தார்.இந்த வேலைகளை அவர் தான் பார்த்து அனுமதிக்கவேண்டும் என்பதால் அவர் எந்த மாதிரி தரத்தை எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக சொல்லிக்கொடுத்தார்.

கட்டுமானத்துறையை பொருத்த வரை வேலை செய்ய பலவிதமான நெறிமுறைகள் இருந்தாலும் மேற்பார்வையாளர்கள் அதுவும் Client Representative க்கு எது தேவையோ அதை செய்தால் பெரும்பாலும் வேலையை சுலபமாக செய்யலாம்.நாம் அதிகமாக பேசினால் தேவையில்லாத விதிமுறைகளை பேசி சின்ன பிரச்சனையை பெரிதாக்கிவிடுவார்கள்.கூடியவரையில் நல்ல தொடர்பு வைத்துக்கொண்டால் போதும்.அதற்காக PWD அளவுக்கெல்லாம் போக வேண்டிய அவசியம் இங்கில்லை.

இன்னும் வரும்...

Saturday, April 5, 2008

பொருளாதர சுணக்கம்

போன பதிவில் பள்ளிக்கூட அனுமதியில் உள்ள நிகழ்வுகளை சொல்லியிருந்தேன்.அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிறகு வேறொன்று புதிதாக முளைத்தது.

அது தான் வீடு வாங்குவது.

இப்போது இருந்த வீட்டின் முதலாளி அம்மாவின் சகோதரர் முகவர் என்றும் அவரை ஒரு முறை சந்தித்து பேசினால் உங்களுக்கு தேவையான வீட்டை வாங்கலாம் என்றும் இப்படி நீங்கள் வாடகைகொடுத்துக்கொண்டு கஷ்டப்பட வேண்டாம் என்று என் மனைவியிடம் போட்ட தூபம் என்ன்னிடம் வந்த போது முழுவதுமாக நிராகரித்தேன்.காரணம் அப்போது என்னுடைய CPF யில் பணம் இல்லாதும் கையில் அந்த அளவுக்கு பணம் இல்லாததும் தான் காரணம்.

அன்றைய நிலையில் வீடு வாங்க நீங்கள் உங்கள் மத்திய சேமநிதியில் இருந்து 10 விழுக்காடு வீட்டு பணத்தை கட்டலாம் என்றும் துண்டு விழுந்தால் கை பணத்தை போட்டும் கட்டலாம் என்று விதி இருந்தது,அதுவே எனக்கு விதியாக முடிந்தது.

சிங்கை வந்து சேர்ந்து 2 வருடங்கள் ஓடியிருந்தது,வேலையும் துரிதமாக ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் தாய்லாந்தில் பண நெருக்கடியால் பங்குவிலைகள் அதல பாதாளத்துக்கு விழுவதாகவும் அதன் மூலம் மத்த ஆசியான் நாடுகளுக்கும் அது பரவக்கூடும் என்று செய்தி வந்துகொண்டிருந்த்து.இதைத்தான் Recession என்றார்கள்.இதன் விளைவு தெரிந்தவர்கள் மழைகாலத்துக்கு சேமிக்கும் எரும்பு போல் மற்றும் ஆபத்து கால ஆமை போல் தங்களை சுருக்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.இதெல்லாம் தெரியாமல் நான் ஏனோ தானோ என்று நினைத்துக்கொண்டிருந்ததை பின்னாளில் உணர்ந்தேன்.அந்த சமயத்தில் Recession என்றாலே என்ன வென்று தெரியாது.இதுவரை அனுபவப்படாத ஒரு அனுபவம் சூடு போட காத்திருந்தது.

இதற்கிடையில் இப்போது இருந்த வீட்டிலும் சின்னச்சின்ன உரசல்கள் ஏற்பட தொடங்கியவுடன் வேறு வீடு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இந்த முறை மகன் படிக்கும் பள்ளிக்கு அருகில் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் என்பதால்,முகவரிடம் என்னுடைய தேவையை சொன்னேன்.அது சுமார் 3 ~ 4 மாதம் ஆனது.லெங்கோக் பாரு என்னும் இடத்தில் ஓரறை வீடு கிடைத்தது.

இதையெல்லாம் விபரமாக என்னுடைய பதிவில் ஏற்கனவே இங்கு சொல்லியுள்ளேன்.

வீடு வாங்கி எல்லாம் ஓரளவு செட்டிலாகிய நேரத்தில் வெளிநாடே போகாத பெற்றோர்களை வரச்சொன்னேன்.அவர்களும் அரை மனதுடன் வரும் நேரத்தில் பொருளாதார சுணக்கம் உச்சத்திற்கு போய்கொண்டிருந்தது.இப்பொது இருக்கும் நிறுவனமும் வேலை கிடைப்பதில் இருக்கும் பிரச்சனைகளை பார்த்து ஒவ்வொருவராக கழற்றிவிட ஆரம்பித்தது.கடைசியில் என்னோடு சேர்த்து சுமார் 6 பேர்களை 4 மாதம் வேலையில்லாமல் சம்பளம் கொடுத்துவைத்திருந்தது.அவர்களுக்கும் வேறு வழி தெரியாததால் கடைசியில் PINK SLIP கொடுத்துவிட்டார்கள்.இந்த நேரத்தில் என் பெற்றோர்களும் வந்தார்கள்.

அவர்கள் வந்த நேரம் எனக்கு வேலையில்லை என்றால் அவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்???இங்குள்ள நிலைமையை சொல்லி சமாளித்தேன்.

வேலைபோய் 1 மாதம் அடுத்த வேலைக்காக முயற்சித்து தோற்றுக்கொண்டு இருந்தேன்.இந்த அழகில் வீடு வேறு,அதற்கு பணம் கட்ட என்ன செய்வது என்ற தெரியாத நிலை.இப்படி நாலா பக்கமும் இருந்து அழுத்தம் அதிகமாகிக்கொண்டு இருந்த்து.

ஒரு சில நேர்காணல் வந்தாலும் உள்ளூர்காரர்களை மட்டுமே எதிர்பார்பதாக சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.அப்போது தெரிந்தது இங்கு வேலை வாய்ப்பு இருக்கும் போது தான் வெளிநாட்டவர்களுக்கு வேலை இருக்கும் மற்ற நேரத்தில் அவரவர்களின் திறமை மற்றும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் வளத்தை பொருத்தே அமையும்.இப்படிப் பட்ட நிலமையை ஒவ்வொரு வெளிநாட்டவரும் எதிர்பார்த்தே வீடு வாங்குவது & குடும்பத்தை அமைப்பது போன்றவற்றை செய்யவேண்டும்,இல்லாவிட்டால் அடி விழும் போது வலி அதிகமாக இருக்கும்.

வீட்டுக்கு வந்த பெற்றோர்களை சும்மாவாக வைத்துக்கொண்டு இருப்பது? அதனால் அவர்களை ஒரு நாள் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அழைத்துப்போயிருந்தேன்.அளவளாவிக்கொண்டு இருக்கும் போது என்னுடைய பேஜரில் ஒரு அழைப்பு.பக்கத்தில் உள்ள தொலைப்பேசியில் அந்த எண்ணை அழைத்து பேசிய போது....

அடுத்த பதிவில் சொல்கிறேன்.