Friday, July 24, 2009

என்னிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

போன பதிவில் என்னுடைய பழைய நிறுவனம் என்னை பிடித்துவைக்க செய்த தந்திரங்களைப் பற்றி சொல்லியிருந்தேன்.
அதில் ஏன் அவர்கள் என்னை பிடித்துவைக்கவேண்டும்?
சிங்கையில் ஆளா இல்லை அதுவும் இவர்கள் கொடுக்கும் சம்பளத்தை தவிர்த்து பார்த்தால் இவர்கள் வேலையில் பெரிய பிரச்சனை/பிடுங்கல் என்று எதுவும் தெரியவில்லை.

என்னுடைய வேலை, வரை படத்தில் உள்ள வேலையை சரியாக செய்கிறார்களா? என்று கண்காணித்து கிளைண்ட் இஞ்சினியரை கூப்பிட்டு அதை அப்ரூவ் செய்ய வைக்கவேண்டும் அதன் மூலம் சில பேப்பர் வேலை இருக்கும்.இவ்வளவு தான்.

Photobucket

இருக்கும் 8 மணி நேரமும் வேலை இருக்கும் என்று சொல்லமுடியாது.குத்தகைகாரரிடம் இருக்கும் ஃபோர்மேன் தான் தொழிலாளர் ஆட்களை கட்டி மேய்பார்கள் என்பதால் வேலை செய்யும் ஆள் --> ஃபோர்மேன் மூலம் வேலை நிலவரம் தெரிந்து பெரியவரை கூப்பிட்டு காண்பிக்க வேண்டும்.இது ஒரு நாளில் மிஞ்சி மிஞ்சி போன 2 மணி நேரம் தான் இருக்கும் (சில நாட்கள் 6 மணி நேர வேலையும் இருக்கும்).மீதி 6 மணி நேரத்தை எப்படி கழிப்பது?எனக்கென்னவோ அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு சைட்டே என் கையில் தான் இருக்கு என்று அலம்பல் பண்ணி ஓட்டத்தெரியாது,என் மண்டைக்கு வேலை இருக்கும் படி ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.வேலையில் இருந்துகொண்டு வேலையில்லாமல் இருப்பது தான் எனக்கு மன உலைச்சல்,அது கடந்த 5 வருடமாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த வேலையிடத்தில் இப்படி இருக்கும் என் உபரி நேரங்களை சும்மாக இல்லாமல் வேலை இடத்துக்கு போய் அங்கு என்ன செய்கிறார்கள் ஏதாவது உபகரணங்கள் தேவைப்படுகிறதா அல்லது வேலையிலேயே பிரச்சனை இருக்கா அதோடு பாதுகாப்பு பிரச்சனை ஏதும் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பேன்.இப்படி செய்யும் போதே ஒரு வேலையை தொழிலாளர் கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்பேன்.இதில் பல விஷயங்கள் தென்பட ஆரம்பித்தன.இப்படி ஒரு படி கீழிறங்கி பார்க்கும் போது வேலை செய்பவர்களுடன் நல்லுறவு வளர்ந்தாலும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களும் தெரிய ஆரம்பித்தது.அங்கு வேலை செய்பவர்களில் நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பில் வேலை செய்பவர்களும் இருந்தனர்.

ஒரு நாள் என்னுடைய வேலை முடிந்தும் வீட்டுக்கு போகாமல் சிறிது கால தாமதமாக புறப்பட்ட போது சைட்டே நிசப்தமாக இருந்தது.ஸ்டீல் வேலை என்பதால் எப்போதும் சப்தமாக இருக்கும் இடம் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கு என்று வேலை நடக்கும் இடத்துக்கு போய் பார்த்தால் அவரவர் வேலையை விட்டு விட்டு வெறுமனே உட்கார்ந்திருந்தார்கள்.நான் வருவதை பார்த்த ஓரிருவர் வேலை செய்ய தொடங்கினர்.மற்ற சிலரிடம் பேசிய போது அவர்கள் மிகவும் டயர்டாக இருப்பதாகவும் சொன்னார்கள்.சரி டயர்ட் எவ்வளவு நேரம் இருக்கும்? ஒரு அரை மணி நேரம்? மணி இப்போது அதையும் தாண்டி 1 மணி நேரமாகிறது என்று சுட்டிக்காட்டேன்.என்னுடைய பேச்சு அவர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை,வேறு வழியில்லாமல் வேலையை தொடர சென்றார்கள்.

மறு நாள் காலை ஒரு 10 நிமிடம் முன்னதாக வந்து குத்தகைக்காரர் மற்றும் எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலைக்கு போகும் முன்பு கொஞ்சம் காத்திருக்க வைத்துவிட்டு அனைவரிடமும் பேசினேன்.

நீங்கள் எல்லோரும் ஓரளவு படித்தவர்கள் அதனால் ஆங்கிலத்தில் உரையாடுகிறேன் அது புரியாதவர்களுக்கு தமிழில் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு,நேற்று நான் கண்காணித்ததையும் அதனால் அவர்கள் முதலாளிக்கு மற்றும் நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்புகளையும் விவரித்தேன்.சில நிமிடங்கள் வரை யாரும் பேசவில்லை.உங்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பது என் வேலை அல்ல அப்படி செய்தால் என் வேலையை நான் பார்க்க முடியாது. நம் மீது நம்பிக்கை வைத்து நம் முதலாளிகள் அவர்கள் வேலையை செய்கிறார்கள் அதனால் நமக்கும் தொடர்ந்து வேலை கிடைத்துக்கொண்டிருக்கிறது.நாம் அவர்களை ஏமாற்றி Overtime செய்ததாக சொல்லி பணம் ஈட்டினால் கொஞ்ச நாளில் கம்பெனி நொடித்து நம் வேலையும் நம்மை விட்டு போய்விடும் அதனால் ஓரளவுக்கு அவர்களை ஏமாற்றாமல் வேலை செய்வோம் என்று Advise செய்தேன்.இது அவ்வளவும் சொன்ன பிறகு ஒரு தொழிலாளி “நாங்கள் வேலை செய்வதற்கேற்ற சம்பளம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் வருடாந்திர சமபள உயர்வு கூட அவ்வளவாக இல்லை” என்றார்.
சம்பளம் போதவில்லை என்று இப்போது சொல்லி பிரயோஜனம் இல்லை.ஊரில் வேலைக்கு எடுக்கும் போது சொன்ன சம்பளம் கொடுக்கிறார்களா இல்லையா என்று பாருங்கள்.சம்பளம் போதவில்லை என்ற நிலையில் ஏன் இங்கு வேலை பார்க்கிறீர்கள்? வேறு இடம் தேடலாமே என்றேன் அதற்கு அந்நபரிடம் இருந்து பதில் இல்லை.சம்பள உயர்வு பற்றி மேலிடத்தில் பேசிப்பார்க்கிறேன் ஆனால் உத்திரவாதம் கொடுக்கமுடியாது என்று என் நிலையை காப்பாற்றிக்கொண்டேன்.

மறு நாளில் இருந்து வேலை அதன் வேகத்தில் நடக்க ஆரம்பித்தது.நேற்று நடந்த இந்த மீட்டிங்கை பற்றி நான் என் தலையிடம் சொல்லவில்லை என்றாலும் குத்தகைக்காரர் தொழிலாளர் மூலம் போய் சேரவேண்டிட இடத்துக்கு சேர்ந்துவிட்டது.இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிந்தது ஆதாவது என்னை கண்காணிக்க எனக்கு பின்னாளேயே ஆள் வைத்திருக்கிறார்கள்.மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்.நான் என்னுடைய பணியில் கவனமாக இருந்ததால் Consultant இடம் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்கொண்டிருந்ததில் எனக்கு மேல் இருந்த தலை மற்றும் அவருக்கு மேல் இருந்த தலைக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் நான் போகிறேன் என்றால் யார் தான் விடுவார்கள்.கூடிய மட்டும் நம் வேலையில் மட்டும் நம்மை சுருக்கிக்கொள்ளாமல் சுற்று வட்டாரத்திலும் கவனம் செலுத்தினால் முன்னேறலாம்.