Friday, July 25, 2008

நடைப்பாதை தேவை.

SRM- பல்கலைக்கழகம்.இதிலிருந்து ஆண்டுக்கு பல பொறியாளர்கள் நம் நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் கொடுக்கப்படுகிறார்கள்,அதே போல் பக்கத்தில் உள்ள வல்லியம்மை மகளிர் கல்லூரியும் கொடுக்கிறது.

ஒரு 3 மாதம் இருக்கும் இந்த பக்கம் போக வாய்ப்பு கிடைத்தது.சரி ரயிலிலும் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டதே என்று எண்ணி ரயிலில் போய் “போத்தேரியில்” இறங்கினேன்.நான் மறைமலை நகரில் வேலை பார்க்கும் காலத்தில் இந்த நிலையம் இல்லை.நிலையத்தின் உள்ளேயிருந்து நடைப்பாலம் மூலம் மேலே ஏறி செங்கல்பட்டு -- தாம்பரம் சாலைக்கு வந்தோம்.இரண்டு கல்லூரிகளுமே சாலைக்கு அநத பக்கத்தில் இருப்பதால் விரைவுச்சாலையை கடந்தே ஆக வேண்டிய கட்டாயம்.ரயில் நிலையத்தில் இருந்து இறங்குபவர்கள் பாதுகாப்பாக கல்லூரிகள் செல்ல வழியே கண்ணுக்கு தென்படவில்லை.
பாத சாரிகள் கடக்க போடப்படும் வரிக்குதிரை கோடுகள் போடக்கூட சரியான இடம் கிடையாது.
வரிக்குதிரை கோடுகளை விரைவுச்சாலையில் போடப்படுவதை சென்னையில் சில இடங்களில் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது.யாரோ கோடுமட்டும் போட்டால் போதும் என்று சொல்லியிருப்பார்களோ? என்ற எண்ணமும் வந்தது.கூடியமட்டும் பாதசாரிகளுக்கான கோடுகள் போடும் போது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சில ஏற்பாடுகளும்,சரியான இடத்தில்/தூரத்தில் அறிவிப்புப்பலகையும்,இரவில் தெளிவாக தெரிய சாலையின் இரு பக்கங்களிலும் அறிவிப்பு விளக்குகளும் வைக்கப்படவேண்டும்.இதுமாதிரி எந்த விதமான முறையான வேலைகள் செய்யப்படாமல் சாலையின் மேல் வரிக்குதிரை கோடுகளை பார்க்கும் போது அதை நம்பி கடக்கும் பாதசாரிகள் மீது பரிதாபம் தான் ஏற்படும்.




சரி,விஷயத்துக்கு வருவோம்.தரமான கல்லூரி என்று ஆனந்தவிகடனிலும் மற்ற பத்திரிக்கையிலும் விளம்பரம் வந்துகொண்டு மக்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கும் கல்லூரி,தன்னுடைய மாணவர்களை இப்படி சாலையை கடக்க அனுமதிக்கலாமா?அதுவும் நாளைய தலைவர்களை இந்த சூழ்நிலையில் படிக்கவைத்து வெளியில் அனுப்பும் போது “பாதுகாப்பு” என்ற ஒன்றை அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

இது எங்கள் வேலையில்லை,நாங்கள் மாணவர்களை அழைத்துவர கல்லூரி பேருந்து இருக்கு அதன் மூலம் பாதுகாப்பாக வரலாமே என்று கேட்கலாம்,அப்படி என்றால் வசதி குறைந்த மாணவர்கள் என்ன செய்வது?வருடத்துக்கு 25000 ரூபாய் பேருந்துக்கு மட்டுமே கொடுக்க எவ்வளவு பேருக்கு வசதி இருக்கு?

இவ்வளவு பெரிய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் கல்லூரிக்கு அரசாங்கத்தை தெரியாதா? இல்லை தேவைப்பட்டவர்கள் மூலம் சரியான துறையுடன் கலந்து பேசி இங்கு ஒரு மேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ அமைத்தால் அது அவர்களுக்கு இருக்கும் அக்கறையை காண்பிக்கும் அல்லவா?

சரி அவர்கள் தான் தனியார் துறை,மக்களின் நன்மதிப்பை பெற அத்தொகுதி நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது செய்யலாமே!!

இங்கு சாலையை கடந்து எவ்வளவு பேர் உயிர்விட்டார்களோ?அது இனிமேல் நடைபெறாமல் இருக்க இதை படிக்கும் யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்/தெரியப்படுத்துங்கள்.

Wednesday, July 23, 2008

வீடே சூளையானால்??

சுண்ணாம்பு சூளை

செங்கல் சூளை

இன்னும் என்னென்ன சூளை இருக்கோ தெரியாது, ஆனால் சென்னையில் நான் பார்த்தவரையில் பல இடங்களில் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும் மற்றும் ஒரு வீட்டுக்கும் மறுவீட்டுக்கும் போதிய இடவெளியில்லாமல் கட்டப்படும் வீடுகளில் உள்ளே இருக்கும் இருக்கும் வெப்பம் கிரீன் ஹவுஸ் வெப்பம் போல் உயர்ந்துகொண்டு போய்கொண்டு இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் மின்விசிறி இல்லாவிட்டால் போதும், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கழகத்தில் உள்ளே இருந்து பயிற்சி செய்ததற்கு சமமாக வேர்வை வெளியாகிவிடும்.இரவு நேரத்தில் மின்சாரம் போய்விட்டால் அவ்வளவு தான், மொட்டை மாடியை நோக்கி படையெடுப்பதை தவிர வேறுவழியில்லை. உங்கள் வீடு கூரை தான் மேற்மாடியென்றால் அவ்வளவு தான். False Ceiling போட்டாலும் எந்தவிதமான வித்தியாசம் இல்லாமல் வீட்டையே சூளையாக்கிவிடும் இப்போதிருக்கும் சூடு.

இதை தடுக்க/தப்பிக்க என்ன வழி?

1.வேறு வீடு பார்க்கவேண்டியது தான்.

2. பணம் இருந்தால் / நல்ல அஸ்திவாரம் இருந்தால் மேல்மாடியில் கூரை போடலாம்.

3.மேற்கூரை மட்டும் பிரச்சனை அல்ல என்பதால் கிழக்கு / மேற்கு நோக்கி உள்ள சுவர்களுக்கு Cladding போன்ற தடுப்புச் சுவர் எழுப்பலாம். ஏற்கனவே கட்டிய வீடு என்றால் மேலும் பிரச்சனை தான்.

4.இந்த கடைசி வழி எனக்கு சுலபமாக தெரிகிறது அதே சமயம் கொஞ்சம் காசும் கம்மியாக தெரிகிறது.இது ஒரு வகையான பெயின்ட்.Thermal Insulation Paint.

இந்த பெயின்ட் சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் அப்படியே பிரதிபலித்துவிடுகிறது.இது வெப்பத்திற்கு மட்டுமில்லாமல் தண்ணீரையும் தடுக்கவல்லது.அதனால் மழைக்காலத்தில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவு இருக்காது.இதை கான்கிரீட்/டைல்ஸ் மீதும் அடிக்கலாம் என்று இதை உற்பத்தி செய்பவர்கள் சொல்கிறார்கள்.

இதை உபயோகப்படுத்திய ஒருவரின் வீட்டை பார்க்க நேரிட்டது. முதல் படம் சாதாரண நிலையில் உள்ள மேற்கூரை





கீழே உள்ள இரு படங்களும் அந்த பெயின்ட் அடித்தபிறகு







இதை அடிப்பதற்கு சதுர அடிக்கு ரூபாய் 20 ~ 25 கேட்கிறார்கள்.(பெயின்ட் விலையுடன் சேர்த்து).அதிக பரப்பளவு இருக்கும்பட்சத்தில் பேரம் பேசலாம்.

உங்க வீட்டின் உள் சூடு அதிகமாக இருக்கா? முயன்று பாருங்கள்.

Tuesday, July 15, 2008

இது என்ன Design னோ!

சென்னை தில்லைகங்கா நகரை சுற்றி இருக்கும் தார் சாலைகளை கான்கிரீட் சாலையாக மாற்றி வருகிறார்கள்.அது நல்லதோ கெட்டதோ அடுத்த ஆட்சி வரும் வரை தெரியாது,என்ன! ஒரே ஒரு அனுகூலம், நினைத்த நேரத்துக்கு வீட்டுக்காரங்க சாலையை தோண்டமுடியாது.அதே சமயத்தில் மின்வாரியமோ அல்லது கழிவுநீர் நிர்வாகமோ போடவேண்டிய குழாயை போட மறந்தாலோ அல்லது மேம்பாட்டிற்காக மேலும் போடவேண்டி வந்தாலோ,அவ்வளவு தான்.

சரி,இப்போது அதை யோசித்து பிரயோஜனம் இல்லை.கான்கிரீட் சாலை தான் போட்டார்களே பக்கத்தில் உள்ள வீட்டுக்கு ஆட்கள் எப்படி போய் வருவார்கள் என்ற எண்ணம் கூடவா இருக்காது? இல்லை, இருந்திருந்தால் சாலை போட்டு ஒரு வருடம் கழித்து தான் நடைபாதை அமைப்பார்களா? அல்லது அது இவர்கள் வேலையில்லையா?



சாலையில், நடக்கும் பறக்கும் வண்டிகள்,மனிதர்கள் இரவு நேரத்தில் மின்வெட்டு சமயத்தில் அதில் காலை வைத்தால் அரசாங்கத்தின் அனுமதியுடன் பரலோகம் போகலாம்.என்ன! எப்போதாவது இழப்பீடு கிடைக்கலாம்,இருந்தாலும் அது வருவதற்குள் இழப்பீடு கேட்டவர் மேலே போயிருக்கக்கூடும். இது முடிவில்லா சங்கிலித்தொடராக நடக்கும்.



அதெல்லாம் விடுங்க,அது பொது மக்களின் வீடுகள்,அவர்களுக்கு தேவையானதை அவர்கள் தான் செய்துகொள்ளவேண்டும்,எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கமுடியாது அல்லது கூடாது.சாலையை திடிரென்று 3 அடி ஏற்றினால் நாமும் நம் வீட்டை அதற்கு தகுந்த மாதிரி ஏற்றிக்கொள்ளவேண்டும். :-(

கீழே உள்ள படத்தை பாருங்கள்...

குறைந்த சம்பளத்தில் உள்ளவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு பொதுவினியோக முறையில் அத்தியாவசியமான சாமான்கள் வழங்கும் இடத்துக்கு போகும் பாதையை பாருங்கள்.சவுக்கால் ஆன மரப்பாலம்,அதைப்பார்த்து தான் முதல்வர் சிரிக்கிறாரா??



இந்த பாலத்துக்கு மேல் கொஞ்சம் குண்டான மனிதர் போனால் அவ்வளவு தான் கீழே உள்ள கால்வாய் அவருக்கு சமாதி கட்டிவிடும்.பக்கத்தில் இருக்கும் கான்கிரீட் சிலாபை பார்க்காதீர்கள் அதற்கு சவுக்கு பாலமே மேல்.

இதைப்பற்றி கட்டுமானத்துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் விளக்கம் கேட்டேன்.அவர் சொன்னது "இனிமேல் தான் அதன் மேல் ஸ்டீல் கிரில் போடுவார்கள் என்றார்" அது உண்மையாக இருக்கும் என்று நம்புவோமாக,அதற்குள் இதனால் யாரும் உயிரிழக்காமல் இருக்கவேண்டும்.