Thursday, February 14, 2008

சிங்கப்பூர் வாழ்கை

போன பதிவில் 1995 வந்ததோடு முடித்திருந்தேன்.

இரண்டாவது முறையாக வருவதால் இடம் & பயணம் என்ற பிரச்சனை எதுவும் இல்லாமல் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அலுவலக முகவரியை Street Directory மூலம் தெரிந்துகொண்டு கிளம்பினேன்.அலுவலக வரவேற்பாளரிடம் என்னுடைய வேலை அனுமதி கடிதத்தை கொடுத்தேன்.அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு,உங்கள் பிராஜக்ட் மேனேஜர் இன்று MC (அப்படி என்றால் என்னவென்று கேட்கவில்லை) அதனால் இன்று சேர்ந்துவிடுங்கள்,நாளை வேலை இடத்துக்கு அழைத்து போவார்கள் என்றார்.

இந்த இடத்தில் சிங்கப்பூரில் வித்தியாசமான பேச்சு வழக்கை பார்ப்போம்.பல சமயங்களில் சுருக்கமாக பேச வேண்டும் என்ற நினைப்பில் மேலே சொன்ன மாதிரி Mediacal Cerificate என்பதை MC என்று சொல்வார்கள். தட்டச்சு செய்யும் தாளில் பிழை இருந்தால் Corrector என்று சொல்லப்படும் வெள்ளை இங்கை "Blanco" என்று கம்பெனி பேர் சொல்லி அடையாளப்படுத்துவார்கள்.கட்டுமான பொருட்களையும் இப்படித்தான்,உதாரணத்துக்கு சில

மண்வாரி இயந்திரத்துக்கு- அந்தந்த கம்பெனி பேர்
சின்ன கம்பி வெட்டும் இயந்திரம்- Markita என்பார்கள்.
பாரம் தூக்கி- கிரேன் என்று சொல்லாமல் அந்த கிரேன் தயாரித்த கம்பெனி பேர் தான்.

முதல் நாள் அலுவலகத்தில் அவ்வளவு வேலை இல்லை என்றாலும் மதிய சாப்பாட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்த போது அங்கிருந்தவர்களிடம் இங்கு சைவம் கிடைக்குமா? என்றேன்.

பக்கத்தில் தான் தேக்கா(சிரங்கூன் சாலை) உள்ளது அங்கு கிடைக்கும் என்றார்கள்.

எங்கள் அலுவலகம் இருந்த இடத்தில் இருந்து சிரங்கூன் சாலை எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை,சிலரிடம் கேட்டு அப்படியே துழாவிக்கொண்டு வந்த போது Bras Brash சாலைக்கு அருகில் வந்த போது ஒரு தமிழர் கடை தென்பட்டது.முகப்பு கண்ணாடி பெட்டிக்குள்ளேயே வகை வகையாக அசைவ உணவுகள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது.சுற்று வட்டாரத்தில் கடை எதுவும் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை,என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் உள்ளே சென்று எனக்கு சாதமும் தயிர் மாத்திரம் கொடுங்கள் போதும் என்று சொல்லி ஊறுகாயுடன் அன்று மதிய சாப்பாடு முடிந்தது.சுங்கை ரோடுக்கு அருகில் இன்றும் உள்ளது அந்த சாப்பாட்டுக்கடை.அவ்வப்போது அந்த பக்கம் போகும் போது நினைப்பு வரும்.

முதல் நாள் வேலை முடிந்து மறுநாள் வேலைக்கு சென்ற போது நான் செல்லவேண்டிய பிராஜக்டின் மேனேஜர் வந்திருந்தார்.அவருடன் கிளம்பி வேலை இடத்துக்கு போனேன்.இந்த இடம் பாசிர் பஞ்சாங் என்ற இடத்தில் இருந்தது.இது ஒரு காலத்தில் டைகர் பீர் தொழிற்சாலை இருந்த இடம்.இங்கு நம் சக வலைப்பதிவர் “கால்கரி சிவாவேலை பார்த்திருக்கார்.

அந்த தொழிற்சாலையை இடித்துவிட்டு அந்த இடத்தில் 8 மாடி தொழிற்சாலை/அலுவலகமாக மாற்ற இருந்தார்கள்.

நான் போன போது அதன் கீழ் தள வேலைகள் நடந்துகொண்டிருந்தன.சில வரை படங்களை கொடுத்து பிராஜக்டை பற்றி தெரிந்துகொள்ளச் சொன்னார்கள்.

முதல் நாளே ஒரு வித்தியாசமான அனுபவம்.

அலுவலகம் அதற்கு பக்கத்திலேயே ஒரு சின்ன கேண்டின் என்று இருந்தது.காலை உணவு மற்றும் மதிய சாப்பாடு பலருக்கும் இங்கு தான். வெகு சிலரே வெளியில் போய் சாப்பிட்டார்கள்.இங்கு கொடுக்கப்படும் மதிய சாப்பாடுகள் அனைத்தும் அசைவ உணவோடு சேர்த்தே வழங்கப்பட்டு வந்தது.

முதல் பிரச்சனை சாப்பாட்டில் அல்ல... தேனீரில்.இங்கு தேனீர் இரண்டு விதமாக வழங்கப்படும்.

ஒன்று பால் கலந்து மற்றொன்று பால் கலக்காமல்.

ஏற்கனவே தயாராக இருக்கும் டீ டிகாஷனில் Codensed Milk ஐ இரண்டு ஸ்பூன் போட்டு,சீனி போட்டு டக டக என்று கடைந்து கொடுப்பார்கள்.அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டால் கிளாசில் கொடுப்பார்கள்.பார்ச்சல் என்றால் நெகிழி பையில் போட்டு கொடுப்பார்கள்.செம சூடாக இருந்தாலும் பை ஒன்றும் ஆகாது.காபி பால் இல்லாமல் குடிக்கும் சிலர் அந்த பையில் சில ஐஸ் கியூபுகளை போட்டு குடிப்பார்கள்.அந்த பையில் ஒரு உரிப்பான் ஒன்றும் இருக்கும்.





முதல் நாள் மதியம் டீ குடிக்கும் வேளை வந்ததும் அங்கிருந்த ஒருவர் என்னிடமும் இந்த பையை கொடுத்தார்.உரிப்பான் மூலம் உரிஞ்ச..ஆ ஆ ஆ

செம சூடு,அப்படியே வைத்துக்கொண்டு சூடு குறையும் வரை அலைந்துகொண்டிருந்தேன்.டபரா டம்ளர் இருந்தாலாவது ஆற்றிவிட்டு சாப்பிடலாம்,கப் ஆக இருந்தாலாவது ஊதி ஊதி குடிக்கலாம்,இது ரெண்டுங்கட்டானாக இருந்தது.

அப்ப நான் பார்த்த ஒரு காட்சி இன்னும் என்னுடைய மண்டை சரியாக வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

ஒரு தாய்லாந்து வேலை ஆள்,தன்னுடைய காபியை அந்த உரிஞ்சான் மூலம் காற்றை ஊதி அதை குளிர்வித்துக்கொண்டு இருந்தார்.அப்போது தான் உறைத்தது இப்படி பாக்கெட்டில் உள்ளதை ஊதி குளிர்விக்கலாம் என்று.

இப்படியாக சிங்கப்பூர் வாழ்கை தொடங்கியது.மீதி அடுத்த பதிவில்.

4 comments:

துளசி கோபால் said...

நெஸஸிட்டி இஸ் த மதர் ஆஃப் இன்வென்ஷன் என்றது சரியா நம்ம்ம தாய்லாந்துக்காரருக்குத் தெரிஞ்சிருக்கு பாருங்க:-)))

சௌ.பெருமாள் said...

சரியா பக் என்று பிடிச்சிட்டீங்க, துளசி.

திவாண்ணா said...

//ஒரு தாய்லாந்து வேலை ஆள்,தன்னுடைய காபியை அந்த உரிஞ்சான் மூலம் காற்றை ஊதி அதை குளிர்வித்துக்கொண்டு இருந்தார்.அப்போது தான் உறைத்தது //

:-)
காமன் சென்ஸ் காமன் மக்களிடம்தான் இருக்கும்.
கட்டுமானம் பத்தி நம்ம குமாரும் பதிவு போடக்காணோம். நீங்களும் எப்பவாவதுதான் போடுவீங்களா?

சௌ.பெருமாள் said...

திவா
நாங்க ரெண்டு பேரும் ஒன்று தான்.
இது சௌந்திரராஜ பெருமாள்- நாகை கோவில் அதான் பெயர் சௌ பெருமாள்.

இன்னும் சில பதிவுகள் பின்னால் போய் பாருங்கள் உங்களுக்கு பிடித்த படங்களுடன் பதிவுகள் இருக்கும். :-)