Sunday, May 11, 2008

மரண பயம்...

போன பதிவில் இந்த கட்டிடம் எப்படி எழுப்பப்படுகிறது என்பதை சொல்லியிருந்தேன்,அதை மிகவும் எளிதாக காட்ட ஒரு படம் கிடைத்தது அது உங்கள் பார்வைக்கு.

சுலபமாக சொல்லவேண்டுமென்றால் இந்த நகர்படத்தை பாருங்கள்.பல வேலைகள் இதை ஒத்தே இருந்தது.

இதே முறையை 52 மாடிகளுக்கும் பின்பற்றினோம்.

இது இரும்பு வேலை என்பதால் எல்லா சமயத்திலும் நூறு சதவீத பாதுகாப்பை எதிர்பார்க்கமுடியாது,சிலவற்றை தள்ளிப்போடலாம்.ஆனால் மனித மனம் தான் குரங்காயிற்றே!!
யாராவது ஒரு காரியம் செய்தால் அது நமக்கு கைவரும் வரை நமைச்சல் தான்.
அதே மாதிரி தான் இரும்பு பீம்களின் மேல் வேலைசெய்வது. ஒரு முனையில் மேற்பார்வை முடிந்தவுடன் அடுத்த முனைக்கு போவதற்கு அந்த பீமின் மேலேயே பாதுகாப்புக்கு கயறு கட்டியிருக்கும் அதனுள் உங்கள் பாதுகாப்பு வாரினை இணைத்துக்கொள்ளவேண்டும்.இது முறை.இல்லாவிட்டால் தூணில் மேலிருந்து கீழிறங்கி பிறகு அடுத்த தூணின் மேல் ஏறவேண்டும்.கால் கயன்றுவிடும்.இதை தவிர்க கழைக்கூத்தாடி மாதிரி பீமின் மேல் நடந்து அடுத்த தூணுக்கு போவோம்.

சில சமயங்களில் அந்த வேலையை செய்ய கால அவகாசம் பிடிக்கும்,வேறு வேலை செய்ய குறுக்கு வழிக்காக கயறு இல்லாத பீம்கள் மேல் நடக்கவேண்டி வரும்.இது தவறு தான் ஆனால் இந்த வேலை செய்பவர்கள் பலரும் இப்படித்தான் நடப்பார்கள்.

என்னுடைய ஆரம்ப கால கட்டுமானபணிகளின் போது அவ்வப்போது இந்த மாதிரி பாதுகாப்பற்ற முறையில் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்துள்ளேன்.அதுவே பழக்கமாகி இங்கும் தொடர்ந்தது.இது பாதுகாப்பற்றது என்பதால் அவசியமில்லாத நேரங்களில் செய்யமாட்டேன்.விதி யாரை விட்டது!!

அப்போது எங்கள் கட்டிடம் 27 மாடியை அடைந்திருந்தது.வழக்கம் போல் வேலை மற்றும் inspection என்று போய்கொண்டிருந்தது.என்னுடன் மேற்பார்வை செய்ய வந்திருந்த இன் ஜினியருடன் inspection க்காக போய்கொண்டிருந்தேன்.

அப்போது தான் முடுக்கிய பீமின் மறு பக்கத்தில் ஒன்றை செக் செய்யவேண்டும் என்று அழைப்பு வந்தவுடன் என்னுடன் வந்த இன் ஜினியர் கயறு கட்டாத பீமின் மேல் நடந்து அக்கரை சென்று சேர்ந்தார்.பாதுகாப்பு கயறு கட்டாமல் inspection எதற்கு கூப்பிடுகிறீர்கள் என்று குத்தகைக்காரரை திட்டிவிட்டு நானும் அந்த பீமின் மீது நடக்க ஆரம்பித்தேன்.

அந்த பீமின் ஒரு பக்கம் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள சாலை மறுபக்கம் இன்னும் முடிவடையாமல் இருக்கும் எங்கள் கட்டிடத்தின் ஒரு பகுதி - ஒரு 10 மீட்டர் ஆழத்தில் இருக்கும் சாரம்.

எப்போதும் போல் தான் நடந்தேன்,பாதி தூரம் கடந்திருப்பேன் என்னவாயிற்று என்று தெரியவில்லை...அடுத்த அடி எடுக்கமுடியவில்லை.என்னுடைய உடம்பு அப்படியே உறைந்துவிட்டது.இந்த மாதிரி நடக்கும் போது நடுவில் நிற்கக்கூடாது எனபது பால பாடம்.
பாதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்த அந்த பொறியாளர் புரிந்துகொண்டார.அங்கிருந்த படி என்னை பார்த்து அப்படியே அந்த பீமின் மீது உட்காரச்சொன்னார்.

என்னால் காலையே நகர்த்த முடியாத பட்சத்தில் எப்படி உட்கார்வது,உட்கார முயற்சிக்கும் நேரத்தில் கொஞ்சம் சாய்ந்தாலும் அவ்வளவு தான் 60 அல்லது 10 மீட்டர் கீழே போக வேண்டும்.என்னை முதலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார் அந்த பொறியாளர்.சில நிமிடங்கள் ஒன்றும் செய்யவில்லை அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காலை நகர்த்த முயற்சித்தேன்.



காலை ஓரளவு நகர்த்த முடிந்தாலும் மேல் நடக்க தைரியம் வரவில்லை.இப்போது மெதுவாக ஒரு காலை மட்டும் கீழிறக்கி பீமின் கீழ் பகுதி வரை கொண்டு போய் உட்கார முயற்சித்தேன்.பல முறை முயற்சித்து ஓரளவு தன்னம்பிக்கை வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து அப்படியே ஒரு காலை மடக்கிக்கொண்டு வந்து உட்காரும் நிலை வந்தவுடன் அப்படியே பீமை கட்டிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன்.அதன் பிறகு அதன் மீதே கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து மறுமுனையை வந்தடைந்தேன்.

இந்த நிகழ்வில் இருந்து காலில் இருந்த ஒரு freeness போய்விட்டது.அதற்குப்பிறகு இப்படி முயற்சிப்பதையே விட்டுவிட்டேன்.

இதை படிப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு இதைச் சொல்லுங்கள்,எக்காலத்திலும் இந்த மாதிரி முயற்சிக்கக்கூடாது என்று.

2 comments:

துளசி கோபால் said...

நினைச்சுப் பார்த்தாலே வயித்தைக் கலக்குது.

எதுக்கு இந்த விஷப்பரீட்சை?

கவனமா இருங்க குமார்.

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
இதெல்லாம் எங்கள் துறையில் சகஜம் என்றாலும் அவ்வப்போது மீறித்தான் ஆகவேண்டியுள்ளது.
இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்.பார்போம்.