Sunday, August 24, 2008

முதுகெலும்பு

கட்டுமானத்துறையின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் பாரம்தூக்கியை நிறுவ இன்னொரு பாரம்தூக்கி உதவுகிறது.

இது என்னுடைய வீட்டின் அருகே நடக்கும் கட்டுமான இடத்தில் பிடித்தது.



இன்னும் நெருக்கத்தில்...

Monday, August 11, 2008

படங்கள்

நான் வாங்கிய சோனி எரிக்சன் W880i மாடலில் எடுத்த படங்கள் சில (பெரிதாக்கிப்பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்)

கால்ஃப் தளம்



மாலை வெயிலில் சாலை



சிஙக்ப்பூரை இன்னும் தோட்ட நகரமாக மாற்றப்போகிறார்களாம்.



மின்வண்டிப்பாலம்

Friday, July 25, 2008

நடைப்பாதை தேவை.

SRM- பல்கலைக்கழகம்.இதிலிருந்து ஆண்டுக்கு பல பொறியாளர்கள் நம் நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் கொடுக்கப்படுகிறார்கள்,அதே போல் பக்கத்தில் உள்ள வல்லியம்மை மகளிர் கல்லூரியும் கொடுக்கிறது.

ஒரு 3 மாதம் இருக்கும் இந்த பக்கம் போக வாய்ப்பு கிடைத்தது.சரி ரயிலிலும் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டதே என்று எண்ணி ரயிலில் போய் “போத்தேரியில்” இறங்கினேன்.நான் மறைமலை நகரில் வேலை பார்க்கும் காலத்தில் இந்த நிலையம் இல்லை.நிலையத்தின் உள்ளேயிருந்து நடைப்பாலம் மூலம் மேலே ஏறி செங்கல்பட்டு -- தாம்பரம் சாலைக்கு வந்தோம்.இரண்டு கல்லூரிகளுமே சாலைக்கு அநத பக்கத்தில் இருப்பதால் விரைவுச்சாலையை கடந்தே ஆக வேண்டிய கட்டாயம்.ரயில் நிலையத்தில் இருந்து இறங்குபவர்கள் பாதுகாப்பாக கல்லூரிகள் செல்ல வழியே கண்ணுக்கு தென்படவில்லை.
பாத சாரிகள் கடக்க போடப்படும் வரிக்குதிரை கோடுகள் போடக்கூட சரியான இடம் கிடையாது.
வரிக்குதிரை கோடுகளை விரைவுச்சாலையில் போடப்படுவதை சென்னையில் சில இடங்களில் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது.யாரோ கோடுமட்டும் போட்டால் போதும் என்று சொல்லியிருப்பார்களோ? என்ற எண்ணமும் வந்தது.கூடியமட்டும் பாதசாரிகளுக்கான கோடுகள் போடும் போது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சில ஏற்பாடுகளும்,சரியான இடத்தில்/தூரத்தில் அறிவிப்புப்பலகையும்,இரவில் தெளிவாக தெரிய சாலையின் இரு பக்கங்களிலும் அறிவிப்பு விளக்குகளும் வைக்கப்படவேண்டும்.இதுமாதிரி எந்த விதமான முறையான வேலைகள் செய்யப்படாமல் சாலையின் மேல் வரிக்குதிரை கோடுகளை பார்க்கும் போது அதை நம்பி கடக்கும் பாதசாரிகள் மீது பரிதாபம் தான் ஏற்படும்.




சரி,விஷயத்துக்கு வருவோம்.தரமான கல்லூரி என்று ஆனந்தவிகடனிலும் மற்ற பத்திரிக்கையிலும் விளம்பரம் வந்துகொண்டு மக்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கும் கல்லூரி,தன்னுடைய மாணவர்களை இப்படி சாலையை கடக்க அனுமதிக்கலாமா?அதுவும் நாளைய தலைவர்களை இந்த சூழ்நிலையில் படிக்கவைத்து வெளியில் அனுப்பும் போது “பாதுகாப்பு” என்ற ஒன்றை அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

இது எங்கள் வேலையில்லை,நாங்கள் மாணவர்களை அழைத்துவர கல்லூரி பேருந்து இருக்கு அதன் மூலம் பாதுகாப்பாக வரலாமே என்று கேட்கலாம்,அப்படி என்றால் வசதி குறைந்த மாணவர்கள் என்ன செய்வது?வருடத்துக்கு 25000 ரூபாய் பேருந்துக்கு மட்டுமே கொடுக்க எவ்வளவு பேருக்கு வசதி இருக்கு?

இவ்வளவு பெரிய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் கல்லூரிக்கு அரசாங்கத்தை தெரியாதா? இல்லை தேவைப்பட்டவர்கள் மூலம் சரியான துறையுடன் கலந்து பேசி இங்கு ஒரு மேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ அமைத்தால் அது அவர்களுக்கு இருக்கும் அக்கறையை காண்பிக்கும் அல்லவா?

சரி அவர்கள் தான் தனியார் துறை,மக்களின் நன்மதிப்பை பெற அத்தொகுதி நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது செய்யலாமே!!

இங்கு சாலையை கடந்து எவ்வளவு பேர் உயிர்விட்டார்களோ?அது இனிமேல் நடைபெறாமல் இருக்க இதை படிக்கும் யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்/தெரியப்படுத்துங்கள்.

Wednesday, July 23, 2008

வீடே சூளையானால்??

சுண்ணாம்பு சூளை

செங்கல் சூளை

இன்னும் என்னென்ன சூளை இருக்கோ தெரியாது, ஆனால் சென்னையில் நான் பார்த்தவரையில் பல இடங்களில் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும் மற்றும் ஒரு வீட்டுக்கும் மறுவீட்டுக்கும் போதிய இடவெளியில்லாமல் கட்டப்படும் வீடுகளில் உள்ளே இருக்கும் இருக்கும் வெப்பம் கிரீன் ஹவுஸ் வெப்பம் போல் உயர்ந்துகொண்டு போய்கொண்டு இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் மின்விசிறி இல்லாவிட்டால் போதும், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கழகத்தில் உள்ளே இருந்து பயிற்சி செய்ததற்கு சமமாக வேர்வை வெளியாகிவிடும்.இரவு நேரத்தில் மின்சாரம் போய்விட்டால் அவ்வளவு தான், மொட்டை மாடியை நோக்கி படையெடுப்பதை தவிர வேறுவழியில்லை. உங்கள் வீடு கூரை தான் மேற்மாடியென்றால் அவ்வளவு தான். False Ceiling போட்டாலும் எந்தவிதமான வித்தியாசம் இல்லாமல் வீட்டையே சூளையாக்கிவிடும் இப்போதிருக்கும் சூடு.

இதை தடுக்க/தப்பிக்க என்ன வழி?

1.வேறு வீடு பார்க்கவேண்டியது தான்.

2. பணம் இருந்தால் / நல்ல அஸ்திவாரம் இருந்தால் மேல்மாடியில் கூரை போடலாம்.

3.மேற்கூரை மட்டும் பிரச்சனை அல்ல என்பதால் கிழக்கு / மேற்கு நோக்கி உள்ள சுவர்களுக்கு Cladding போன்ற தடுப்புச் சுவர் எழுப்பலாம். ஏற்கனவே கட்டிய வீடு என்றால் மேலும் பிரச்சனை தான்.

4.இந்த கடைசி வழி எனக்கு சுலபமாக தெரிகிறது அதே சமயம் கொஞ்சம் காசும் கம்மியாக தெரிகிறது.இது ஒரு வகையான பெயின்ட்.Thermal Insulation Paint.

இந்த பெயின்ட் சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் அப்படியே பிரதிபலித்துவிடுகிறது.இது வெப்பத்திற்கு மட்டுமில்லாமல் தண்ணீரையும் தடுக்கவல்லது.அதனால் மழைக்காலத்தில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவு இருக்காது.இதை கான்கிரீட்/டைல்ஸ் மீதும் அடிக்கலாம் என்று இதை உற்பத்தி செய்பவர்கள் சொல்கிறார்கள்.

இதை உபயோகப்படுத்திய ஒருவரின் வீட்டை பார்க்க நேரிட்டது. முதல் படம் சாதாரண நிலையில் உள்ள மேற்கூரை





கீழே உள்ள இரு படங்களும் அந்த பெயின்ட் அடித்தபிறகு







இதை அடிப்பதற்கு சதுர அடிக்கு ரூபாய் 20 ~ 25 கேட்கிறார்கள்.(பெயின்ட் விலையுடன் சேர்த்து).அதிக பரப்பளவு இருக்கும்பட்சத்தில் பேரம் பேசலாம்.

உங்க வீட்டின் உள் சூடு அதிகமாக இருக்கா? முயன்று பாருங்கள்.

Tuesday, July 15, 2008

இது என்ன Design னோ!

சென்னை தில்லைகங்கா நகரை சுற்றி இருக்கும் தார் சாலைகளை கான்கிரீட் சாலையாக மாற்றி வருகிறார்கள்.அது நல்லதோ கெட்டதோ அடுத்த ஆட்சி வரும் வரை தெரியாது,என்ன! ஒரே ஒரு அனுகூலம், நினைத்த நேரத்துக்கு வீட்டுக்காரங்க சாலையை தோண்டமுடியாது.அதே சமயத்தில் மின்வாரியமோ அல்லது கழிவுநீர் நிர்வாகமோ போடவேண்டிய குழாயை போட மறந்தாலோ அல்லது மேம்பாட்டிற்காக மேலும் போடவேண்டி வந்தாலோ,அவ்வளவு தான்.

சரி,இப்போது அதை யோசித்து பிரயோஜனம் இல்லை.கான்கிரீட் சாலை தான் போட்டார்களே பக்கத்தில் உள்ள வீட்டுக்கு ஆட்கள் எப்படி போய் வருவார்கள் என்ற எண்ணம் கூடவா இருக்காது? இல்லை, இருந்திருந்தால் சாலை போட்டு ஒரு வருடம் கழித்து தான் நடைபாதை அமைப்பார்களா? அல்லது அது இவர்கள் வேலையில்லையா?



சாலையில், நடக்கும் பறக்கும் வண்டிகள்,மனிதர்கள் இரவு நேரத்தில் மின்வெட்டு சமயத்தில் அதில் காலை வைத்தால் அரசாங்கத்தின் அனுமதியுடன் பரலோகம் போகலாம்.என்ன! எப்போதாவது இழப்பீடு கிடைக்கலாம்,இருந்தாலும் அது வருவதற்குள் இழப்பீடு கேட்டவர் மேலே போயிருக்கக்கூடும். இது முடிவில்லா சங்கிலித்தொடராக நடக்கும்.



அதெல்லாம் விடுங்க,அது பொது மக்களின் வீடுகள்,அவர்களுக்கு தேவையானதை அவர்கள் தான் செய்துகொள்ளவேண்டும்,எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கமுடியாது அல்லது கூடாது.சாலையை திடிரென்று 3 அடி ஏற்றினால் நாமும் நம் வீட்டை அதற்கு தகுந்த மாதிரி ஏற்றிக்கொள்ளவேண்டும். :-(

கீழே உள்ள படத்தை பாருங்கள்...

குறைந்த சம்பளத்தில் உள்ளவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு பொதுவினியோக முறையில் அத்தியாவசியமான சாமான்கள் வழங்கும் இடத்துக்கு போகும் பாதையை பாருங்கள்.சவுக்கால் ஆன மரப்பாலம்,அதைப்பார்த்து தான் முதல்வர் சிரிக்கிறாரா??



இந்த பாலத்துக்கு மேல் கொஞ்சம் குண்டான மனிதர் போனால் அவ்வளவு தான் கீழே உள்ள கால்வாய் அவருக்கு சமாதி கட்டிவிடும்.பக்கத்தில் இருக்கும் கான்கிரீட் சிலாபை பார்க்காதீர்கள் அதற்கு சவுக்கு பாலமே மேல்.

இதைப்பற்றி கட்டுமானத்துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் விளக்கம் கேட்டேன்.அவர் சொன்னது "இனிமேல் தான் அதன் மேல் ஸ்டீல் கிரில் போடுவார்கள் என்றார்" அது உண்மையாக இருக்கும் என்று நம்புவோமாக,அதற்குள் இதனால் யாரும் உயிரிழக்காமல் இருக்கவேண்டும்.

Wednesday, June 18, 2008

பிக்பாக்கெட்டா? தொலைந்ததா?

அடையாள அட்டை தொலந்து இரண்டு வாரம் ஆகியும் எந்த விபரமும் கிடைக்காததால், போலீஸ் ரிப்போர்ட்டுடன் குடிநுழைவுத்துறைக்கு போனேன்.வரிசை பிடித்து நின்றேன்,இப்படி நிற்க ஆரம்பிக்கும் போதே ஒரு ஒழுங்கு முறை ஆரம்பமாகிவிடுகிறது,யாரும் யாரையும் மோதுவதில்லை அடுத்தவரை கள்ளத்தனமாக முந்திக்கொண்டு போவதில்லை.நம்மவர்கள் இருந்தால் நம் தோளுக்கு மேல் ஒரு வாட்டியாவது எட்டிப்பார்காமல் இருக்கமாட்டார்கள்,அப்படி என்ன அவதியோ! இது சாப்பாட்டுக்கடை வரிசையில் நடக்கும்.கோமளவிலாசுக்கு போனால் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

என் முறை வந்தது,போலீஸ் கடிதத்தை கொடுத்ததும்அந்த அதிகாரி ஒரு கேள்வி கேட்டார்,யாராவது விபரமானவங்க பதில் சொல்லுங்கள்...

திடிரென்று சாப்பிட போன இடத்தில் என் அடையாள அட்டை காணாமல் போய்விட்டது,இதை எப்படி வகைப்படுத்துவது?

காணாமல் போனதாகவா? அல்லது பிக்பாக்கெட் யில் இழந்ததாகவா?

பிக்பாக்கெட் என்றால் எனக்கு அரை குறையாக தெரியும் என்று எதிர்பார்க்கிறார்களா?

இதைத்தான் அந்த அதிகாரி என்னிடமும் கேட்டார். நான் சொன்னேன் எனக்கு காணாமல் போனது தான் தெரியும் அதை எப்படி பிக்பாக்கெட் என்று வகைப்படுத்தமுடியும் என்று?அவர்களுக்கு சொல்லி கொடுத்துள்ளதில் இது இரண்டைத்தவிர வேறு இல்லாத்தால் அந்த அதிகாரியால் எதுவும் சொல்லமுடியவில்லை.நீங்கள் தான் ஒன்றை தேர்ந்தெடுத்து சொல்லனும் என்றார். எனக்கு இருந்த அவசரத்தில்"காணாமல்" தான் போனது என்றேன்.

அப்படியென்றால் 100 வெள்ளி கட்டிவிட்டு இரண்டு வாரம் கழித்து அடையாள அட்டையை எடுத்துச்செல்லுங்கள் என்றார்.பணத்தை கட்டி வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது.

காணாமல் போனது என்றால்- என்னுடைய தவறு - அதற்கு 100 வெள்ளி தெண்டம்

பிக்பாக்கெட் என்றால் - என் தவறு இல்லை -- அதற்கு 50 வெள்ளி தெண்டம்.

என்ன செய்வது எல்லாவற்றையும் பட்டு தான் தெரிந்துகொள்ளமுடிகிறது.

அடையாள அட்டை தொலந்தால் என்னென்ன பிரச்சனை வரும் பார்ப்போமா?

1.கள்ளக்குடியேறி உபயோகிக்க பயன்படுத்தலாம். (நல்ல வேளை இது என் அட்டையில் நடக்கவில்லை)

2.உங்கள் அட்டையை வைத்து கள்ள வட்டிக்கும்பலிடம் கடன் வாங்கலாம்.

3. இருக்கும் எல்லா தொலைபேசி நிறுவனத்திலும் கணக்கு ஆரம்பித்து புது தொலைப்பேசி/ அந்த மாதத்தில் பேசப்படும் அழைப்புகளுடன் கம்பிநீட்டலாம். தலைப்பேசி நிறுவனங்களுக்கும் குடிநுழைவுத்துறையும் இந்த தகவல்களை பகிர்ந்துகொள்வதில்லை.இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான்.தகவல்கள் கை மாறி மாறி நம் தகவல்கள் எங்கெல்லாம் போய் நிற்கும் என்று தெரியாது பாருங்கள்.

4.எனக்கு தெரியாம இன்னும் பல வழிகள் இருக்கலாம்....

இதில் எங்கெங்கு மாட்டிக்கொண்டேன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, June 1, 2008

Lau Pa Sat



மேலே உள்ள படம் தான் லாவ் ப சாட் என்கிற இடம்.இதனுள் பல உணவு அங்காடிகள் உள்ளது.இதன் முந்தைய வரலாறு சிங்கப்பூருடன் தொடர்புடையதால் வெளி அமைப்பை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள்.இந்த பகுதி மத்திய வட்டார இடத்தில் உள்ளதால் பல நாட்டுக்காரர்களும் உபயோகப்படுத்தும் விதமாக விதம் விதமான சாப்பாடுகள் கிடைக்கும்.விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

வரலாற்றுப் பின்னனியில் இருக்கும் இக்கட்டிடம் என்னுடைய வாழ்விலும் வரலாறு படித்தது அதை பிறகு சொல்கிறேன்.

நாங்கள் கட்ட இருந்த கட்டிடம் Exchange Centre என்று இப்போது அழைக்கப்படுகிற கட்டிடம் ஆகும்.எங்கள் வேலை 3வது மாடியில் இருந்து ஆரம்பிக்கும் என்பதால் கட்டிடம் தரையில் இருந்து எழும்பிய பிறகே போனோம்.Capital Tower யில் செய்த பணி போலவே இதுவும் அதனால் வேலை வித்தியாசம் அவ்வளவாக இல்லை.என்ன! இப்போது குத்தகைகாரர் மாதிரி வேலை பார்க்கனும் என்பதால் ஆட்களை வேலை வாங்குவதும் சில ரக இயந்திரங்களை ஓட்டவும் கற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.ஒவ்வொரு நாள் தேவைக்கும் வேண்டிய சகலமானவற்றையும் பார்த்துக்கொள்வதும் நம் கையில் விழுந்தது.எல்லா நாட்களும் வேலை இருக்காது என்பதால் சில நாட்கள் சாப்பிட மட்டுமே வேலைக்கு வருவது போல் தோன்றியது.
சில நாட்களுக்கு காலை அலுவலகம் வந்த 20 நிமிடத்திலேயே கண்ணை கட்ட ஆரம்பித்துவிடும்.குளிர்சாதனம் பிரச்சனையும் இதில் உதவியது.அப்போதே முடிவு செய்தேன் இந்த நிறுவனத்தை விட்டு விட வேண்டும் என்று.அதோடு அப்போது அந்நிறுவனத்திலும் உள் பிரச்சனைகள் கட்டுக்கு அடங்காமல் போய்கொண்டிருந்தது என்று காற்று வாக்கில் வரத்தொடங்கியது.

சிங்கையில் வேலை நிலவரம் மேம்படும் வரை காத்திருப்போம் என்று காத்திருந்தேன்,அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறி கட்டுமானத்துறையில் தெரியவில்லை.



இரண்டு பிலாக்குகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் எங்கள் வேலை,அதோடில்லாமல் மேலே சரிவாக இருக்கும் பகுதியும் ஸ்டீலால் ஆனதும் எங்கள் வேலை.இதில் வலது பக்கம் இருக்கும் கூரையில் வேலை ஆரம்பிக்கும் வரை தான் நான் இங்கு இருந்தேன்.

மேலும் சில படங்கள் கீழே...





இப்படி அப்படி என்று 8 மாதங்கள் ஓடி ஒரு நேர்காணலுக்கும் அழைப்பு வரவில்லை.வரும் விளம்பரங்களில் பலவற்றில் உள்ளூர்காரர் வேண்டும் என்றோ அல்லது இரு மொழி (சீனம் & ஆங்கிலம்) பேசும் ஆட்கள் மட்டுமே தேவை என்று வந்துகொண்டிருந்தது.சனிக்கிழமை வரும் செய்திதாளில் வரும் விளம்பரங்கள் குறைந்து சில பக்கங்களே வந்தது.அதை வைத்தே சிங்கையில் வேலை நிலவரம் எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். :-)

இப்படி போய்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் பக்கத்தில் உள்ள லா ப சாட்டில் சாப்பிட போனேன்.உணவு ஆர்டர் செய்யும் போது பையில் கையைவிட்டா....! என்னுடைய அடையாள அட்டையுடன் வங்கி அட்டை இருக்கும் சின்ன பை காணாமல் போயிருந்தது. ஷாக் அடித்தது போல் இருந்தது.எங்கு தொலைத்தேன் என்று தெரியவில்லை.அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தேனா? அல்லது இங்கு பிக்பாக்கெட்டிடம் இழந்தேனா? என்று தெரியாத குழப்பத்தில்,முதலில் செய்தது வங்கி அட்டையை முடங்கச்செய்ய தொலைபேசியது தான்.

பல இடங்களிலும் கிடைக்காததால் அன்று சாயங்காலம் காவல்துறை போஸ்ட்க்கு சென்று ரிப்போர்ட் செய்தேன்.அவர்களோ இன்னும் ஒரு வாரம் வரை காத்திருக்கச்சொன்னார்.யாராவது எடுத்திருந்தால் ரிப்போர்ட் செய்ய அவசியம் இல்லாமல் போகக்கூடும் என்பதால்.ஒரு வாரம் வரை எந்த விதமான விபரமும் கிடைக்காததால் திரும்ப அவர்களிடம் போய் ஒரு ரிப்போர்ட் வாங்கி வந்தேன்,அதை வைத்து தான் வேறு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அதற்கு வேறு தெண்டம் அழனும்.

இன்னும் வரும்...